சிட்டுகள் தினம்
சின்னச்சின்னக் குருவிகளே!
சிறகடிக்கும் சிட்டுகளே!.
எண்ணங்கள் சிறகடித்து
எண்ணித் தினம் தேடுதே!..
வீடுகளில் கூடு கட்டி
விளையாடுஞ்சிட்டுகளே!
கிச்கிச்செனும் சின்னொலியும்
இரசிக்கத்தான் கேட்கலையே!
பாரதியை தேடித்தான்
பறந்தே யங்கும் சென்றீர்களோ !
யாரை நீங்கள் ஊடியே
ஊரையுந் துறந்தீர்களோ !
சின்ன உங்கள் இதயங்கள்
மின்னலைகள் தாங்கலையோ!
எண்ண அலைகள் சேரலையோ!
என்னருமைச் சிட்டுகளே!
காலை மாலை கூடியே
காணத்தான் வருவீர்களோ !
உங்களுக்குத் தானியமோ
உலர்ந்துதான் காய்கிறதே!
No comments:
Post a Comment