Monday, 17 February 2014

சின்னச்சிட்டுகள்

சின்னச்சின்னச்சிட்டுகளே!
.
சின்னச்சின்னச்சிட்டுகளே!
சிறகடிக்கும் பறவைகளே.
எண்ணங்கள் சிறகடித்து
எண்ணித்தினம் தேடுதே..

வீடுகளில் கூடு கட்டி
விளையாடுஞ்சிட்டுகளே!
கிச்கிச்செனும் சின்னொலியும்
இரசிக்கத்தான் கேட்கலையே!

பாரதியை தேடித்தான்
பறந்தங்கும் சென்றீர்களோ!
யாரிடம்தான் கோபமோ!
ஊரையேனோ மறந்தீர்களோ!!

சின்ன சின்ன இதயங்கள்
மின்னலைகள் தாங்கலையோ!
சிங்களராய் உம்மினத்தை
சிதைக்கத்தான் வந்தனவோ!

காலை மாலை கூடியே
காணத்தான் வருவீர்களோ!
உங்களுக்குத் தானியமோ
உலர்ந்துதான் காய்கிறதே!

கொ.பெ.பி.அய்யா.




சிட்டுக்குப் பெண் பிறந்தநாள்

சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,

சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,
சீமைக்கெல்லாம் சேதிவிட்டாள்.
பட்டுவிட்ட இனம் வாழ
பார்வதியே பிறந்தாளென்றாள்.

பேரும் வைக்க வேண்டுமென்றாள்
ஊருக்கெல்லாம் அழைப்பு வைத்தாள்.
பெண்ணரசி வீர்மங்கை
பெயர் சூட்ட வேண்டுமென்றாள்.

வாழைக்கும் சொன்னாளே!
வரவேற்பு செய்வதற்கு.
மாவிலையும் தேடினாள்.
தோரணங்கள் கட்டுதற்கு.

மயிலோட நாட்டியம்
மட்டுமல்ல கேளுங்கள்
குயிலோட பாட்டுந்தான்
கூடவே உண்டென்றாள்.

அலங்காரம் செய்வதற்கு
அன்னமே வருகுதென்றாள்.
கோலமிட்ட ஆடைநெய்து
கொண்டு வரும் வானமென்றாள்..

காரிருள் மையெழுத
கட்டாயம் வருமென்றாள்.
வானவில்லும் வருகுதென்றாள்
வண்ணங்கள் வளையல் கொண்டு.

சூரியன் வருகிறான்
சுட்டியொன்னு சூட்டியிட.
சந்திரனும் வருகிறான்
சந்தணத்தில் பொட்டுயிட.

மின்னலும் வந்திடும்
பொன்சரடும் தந்திடும்.
மேகமும் பந்தலிட்டு
முத்துமணி கோர்த்திடும்..

இடிமுழங்கி ஓசையுடன்
வெடிவெடிக்க வருகிறான்.
காற்றுங்கூட வருகிறான்
கால்க் கொலுசுந் தருகிறான்.

விண்மீன்கள் மலர் தூவும்.
பன்னீரை மழை தெளிக்கும்.
வான்குவிந்து குடைபிடிக்கும்.
வனங்குலுங்கி குலவையிடும்.

பழங்கொண்டு கிளிவரும்.
பால்கொண்டு பசுவரும்..
தென்னை இளநீருங் கொண்டு
பெண்சுமக்க ஆனை வரும்.

அவரவர்க்கு உகந்தபடி
அனைவருமே வந்திடுவர்.
அன்புடன் அழைக்கின்றாள்
அவசியமாய் வந்திடுவீர்.

பெண்ணாகப் பிறந்தவளை
பெருமை செய்யவேண்டுகிறேன்.
கண்ணாகப் போற்றுங்கள்
காலத்தின் தொடர்சசியவள்.

கொ.பெ.பி.அய்யா.




Sunday, 16 February 2014

சிட்டுக் குருவிகளா விட்டுப்பிரிவிகளா

இன்பம் தருவீகளா?

சிட்டுக் குருவிகளா என்னை
விட்டுப் பிரிவிகளா?
நத்தும் உறவுகளா என்னை
நாட மறப்பீகளா?

பட்டுச் சிறகுகளால் மெல்லத்
தட்டி எழுப்புவிகளா?
கத்தும் சிற்றொலியால் நல்ல
கானம் செய்வீகளா?

பட்ட உறவுகளை மீண்டும்
பாடித் திரிவீகளா?
கெட்ட சகுனங்களை தாண்டும்
கேண்மை வருவீகளா?

எட்டும் தூரமட்டும் அங்கும்
எடுத்துப் போவீகளா?
வெட்ட வெளியில் எங்கும்
சுற்றிக் காண்பீகளா?

சுட்டும் சுடர்விழிப் பாரதி
சொந்தச்சிட்டுகளா!
இட்டும் அவன்வழி பழகி
இன்பம் தருவீகளா?

தொட்டு நாளெல்லாம் எமக்கு
துணையாய் இருப்பீகளா?
கிட்டும் சொர்க்கமாம் இங்கே
கிளைத்து வாழ்வீகளா?


கொ.பெ.பி.அய்யா